கொல்லிமலை: புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறையை காரணமாக கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்குள்ள அருவிகளில் மிதமான நீர்வரத்து மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்ட எல்லையில் கிழக்கு மலை தொடர்ச்சியில் கொல்லிமலை உள்ளது. மூலிகை வளம் நிறைந்த மலை என்பதாலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், இங்கு ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம் இருக்கும். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பயணிகள் வருகை அதிகரிக்கும்.
இதன் மூலம் கொல்லிமலை பகுதியில் இயற்கையாக விளையும் பழங்கள் மற்றும் தானியங்கள் விற்பனை சந்தையில் வர்த்தகமும் களைகட்டும். இந்நிலையில், புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை, ஞாயிற்றுக் கிழமை தொடர் விடுமுறையைத் தொடர்ந்து கொல்லிமலையில் கடந்த இரு நாட்களாக வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.
பல்வேறு ஊர்களிலிருந்து நேற்று வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கோடைக்கு இதமான குளிர்ந்த சீதோஷ்ண நிலையை ரசித்தனர். மேலும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் நம் அருவிகளில் மிதமான நீர்வரத்து இருந்தது. இந்த அருவிகளில் பயணிகள் குளித்து மகிழ்ந்து, பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை அழகை ரசித்தனர்.
பயணிகள் வருகையால் கொல்லிமலையில் வர்த்தகம் களை கட்டின. தங்கும் விடுதிகள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் இருந்தது. மேலும், வரும் நாட்களில் கோடை விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் 10 பயணிகள் காயம்: இதனிடையே, புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த 30 பேர் நேற்று முன்தினம் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பேளுக்குறிச்சி சந்தைக்குச் சுற்றுலா வேனில் வந்து மளிகை பொருட்களை வாங்கினர். பின்னர் வேனில் கொல்லிமலைக்கு சென்று அங்குள்ள பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு மாலை வீடு திரும்பினர்.
கொல்லிமலை நரியன்காடு மாற்றுப் பாதை வழியாக வேன் வந்த போது, சித்தூர்நாடு மேல்பூசணி குழிப்பட்டி வளைவில் திரும்பிய போது வேன் எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்தது. இதில், வேனில் வந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாகப் பேளுக் குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.