2026ல் திமுகவின் வெற்றி பாதிக்கப்பட போவது இதனால்தான்: ஐபெட்டோ அண்ணாமலை உறுதி


அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை

கும்பகோணம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், அது 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றியை பாதிக்கும் என அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை கூறியுள்ளார்.

கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுபேற்றப் பிறகு மும்மொழிக் கொள்கை திட்டத்தை அமல்படுத்துவதில் தீவிர செயல்பட்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்த ஆங்கிலப் பெயர்களை, இந்தி மொழியில் மாற்றி உள்ளதற்கு கண்டனத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக மாற்ற வில்லை என்றால், அகில இந்திய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஒய்வுபெற்றோர், போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஆகியோருக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு காரணம், தமிழகத்தில் அதிகாரிகளின் ஆட்சி நடைபெறுகிறது. ஏப்.30-ம் தேதிக்குள், தமிழக முதல்வர், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவோம் என்று, 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும்.

2026 ஏப்ரம் மாதத்தில் தேர்தல் வந்துவிடும் என்பதால், தமிழக முதல்வர், 6.25 லட்சம் பேருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என உறுதியளிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவோம் என்றும், அது 2025ம் ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால், 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதியாக பாதிக்கும்.

இதற்காக மே மாதத்தில் ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் இணைந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடத்தியதைவிட, வலுவான போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்த 52 ஆயிரம் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் நியமனத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

x