மன்னார்குடி காமராஜர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றி கருணாநிதி பெயரா? - சீமான் கண்டனம்


சென்னை: மன்னார்குடி காமராஜர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமைந்திருந்த பேருந்து நிலையம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் காயிதே மில்லத் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலைய அங்காடி ஆகியவை சீரமைப்பு செய்து, புதிதாக திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் அவற்றுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட திமுக அரசு முடிவெடுத்துள்ளது. ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் புதிதாக திறக்கும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் கருணாநிதி பெயரை சூட்டுவதை திமுக வாடிக்கையாக வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தலைவர்களுக்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக உள்ள அடையாளங்களை அழித்தொழிக்கும் வகையில், பராமரிப்பு என்ற பெயரில் கட்டிடங்களில் ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரை மாற்றி, கருணாநிதி பெயரில் திறப்பது என்பது வன்மையாக கண்டனத்துக்குரியது. அண்மையில், பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே, நாராயணசாமி நாயுடுவுக்கு அமைத்திருந்த சிலையை அகற்றி, அங்கே கருணாநிதி சிலையை நிறுவ முயன்றனர்.

அதேபோல் திருவள்ளூர் நகரில் காமராஜர் பெயரில் அமைந்திருந்த காய்கறி சந்தையின் பெயரை மாற்றி, கருணாநிதியின் பெயரைச் சூட்ட முயன்றனர். இவற்றுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் திமுக அரசு பின் வாங்கியது குறிப்பிடத்தக்கது. எனவே, மன்னார்குடி காமராஜர் பேருந்து நிலையம் மற்றும் ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

x