தஞ்சாவூர்: தஞ்சையில் பாஜக சார்பில் திருச்சி பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய் சதீஷ் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் தலைமை வகித்தார். கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, பாலியல் தொல்லை, போதை பொருட்கள் கடத்தல், மாணவர்கள் மோதல், சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு போன்றவற்றை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 2026-ல் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி அவுட் ஆப் கன்டோர் ஆகப் போகிறது.
சமூக வலைதளங்களில் யாரையும் புண்படுத்தாமல் பாஜகவினர் கருத்துகளை வெளியிட வேண்டும். கூட்டணி பற்றியோ, வேறு யாரையும் பற்றியோ கருத்துகளை வெளியிட வேண்டாம். ஒற்றுமையாக இருந்து பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும். 10 மாதங்கள் விரதம் இருந்து உழைத்தால், அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும். இதற்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
திமுகவில் அமைச்சர் பொன்முடி மட்டுமல்ல, எல்லா அமைச்சர்களும் பெண்களை மதிப்பது கிடையாது. பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முதல்வர் தனது கையில் வைத்துள்ள காவல் துறையை சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும். அதிமுக, பாஜகவை தோற்கடிக்க தமிழக முதல்வரால் முடியாது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவுட் ஆஃப் கன்ட்ரோலில் உள்ளது. மத்திய அரசு எந்த திட்டங்களை அறிவித்தாலும், திமுக ஏற்றுக்கொள்வது கிடையாது. திமுகவுக்கு இப்போது ஆட்சி போய்விடும் என்ற பயம் வந்து விட்டது. டெல்லி, ஹரியாணா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்தது உள்துறை அமைச்சர் அமித் ஷா தான். தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர போவதும் அந்த ஷா தான் என்றார்.
முன்னதாக தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.