திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது ஒலிக்கும் பலத்த வெடிச் சத்தத்துக்கான காரணம் தெரியாமல் மக்கள் திணறுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேடசந்தூர் அருகேயுள்ள ரெங்கமலை மலைப் பகுதியில் பலத்த வெடிச் சத்தம் முதன் முறையாகக் கேட்டது. அவ்வப்போது குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் இந்த வெடிச் சத்தம் கேட்டதால் மக்கள் இதற்கான காரணம் குறித்து அறிய முயன்றனர். வேடசந்தூர் வட்டாட்சியர் மாவட்ட நிர்வாகத்துக்கு இந்த வெடிச் சத்தம் வேடசந்தூர் வட்டாரத்தில் எந்தெந்தப் பகுதியில் கேட்டது என்பது குறித்து அறிக்கையும் கொடுத்தார்.
மாதத்துக்கு 2 முறையாவது இந்த வெடிச்சத்தம் கேட்டு விடும். அதிலும் இந்த வெடிச் சத்தம் கேட்பதற்கு முதல் நாள் அல்லது அன்றே விமானங்கள் பறக்கும் சத்தமும் கேட்பது வாடிக்கையாக இருந்துள்ளது. இதையடுத்து கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து பயிற்சி விமானங்கள் திண்டுக்கல் வரை வந்து திரும்புவதால் ஏற்படும் சத்தம் வெடிச்சத்தம் போல் கேட்கிறது என ஆதாரப்பூர்வமற்ற தகவல் பரவியது.
முதன்முதலாக வெடிச்சத்தம் கேட்டபோது (2013ம் ஆண்டு) இது குறித்து அப்போதைய ஆட்சியர் வெங்கடாச்சலம், ஆய்வு நடத்தி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். அதன்பின்பு எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. வெடிச்சத்தம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் போல், திண்டுக்கல் மாவட்டத்தில் ரெங்கமலையில் ஏதேனும் ஆய்வு நடக்கிறதோ என்றும் மக்களிடம் சந்தேகம் எழுந்தது. அதற்கும் விடை கிடைக்கவில்லை.
இதையடுத்து ஹரிஹரன், டி.ஜி.வினய், விஜயலட்சுமி, விசாகன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோதும், இந்த வெடிச் சத்தம் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க முயன்றனர். டி.ஜி.வினய் ஒருபடி மேலே சென்று மத்திய அரசு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வெடிச்சத்தத்துக்கான காரணத்தை அறிய முயன்றார். ஆனால், அதற்கு மத்திய, மாநில அரசுகளின் எந்தத் துறையும் முறையாக பதில் அளிக்க முன்வரவில்லை. இதனால் அவ்வப்போது கேட்கும் பலத்த வெடி சத்தத்தின் மர்மம் தொடர்ந்தது.
இந்தச் சத்தம் வேடசந்தூர் வட்டாரம் மட்டுமின்றி சில ஆண்டுகளாக வடமதுரை, சாணார்பட்டி ஆகிய வட்டாரப் பகுதிகள் வரை கேட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், வடமதுரை, எரியோடு, சாணார்பட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் வெடிச் சத்தம் 30 கி.மீ. சுற்றளவு வரை கேட்கத் தொடங்கியது. கடந்த ஆண்டு சாணார்பட்டி பகுதியில் கேட்ட வெடிச்சத்தத்தால் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. அந்த அளவுக்கு சத்தம் பலமாக இருந்தது.
இது குறித்து அறிந்த அப்போதைய ஆட்சியர் பூங்கொடி, மாவட்டத்தில் எந்தெந்தப் பகுதியில் வெடிச் சத்தம் கேட்டது என்பது குறித்து வட்டாட்சியர்கள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். இந்த அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரலில் புவியியல் மற்றும் நில நடுக்கவியல் துறையின் நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த வெடிச்சத்தம் நில நடுக்கத்துடன் தொடர்புடையதல்ல என அறிக்கையும் சமர்ப்பித்தனர். (இவர்கள் ஆய்வின்போது பலத்த வெடிச் சத்தம் கேட்டதா எனத் தெரியவில்லை). அவ்வப்போது கேட்கும் வெடிச் சத்தம் நில நடுக்கத்துடன் தொடர்புடையவை அல்ல என்று கூறிய நிபுணர்கள், வெடிச் சத்தத்துக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. நிபுணர்கள் ஆய்வுக்குப் பின்னரும் வெடிச் சத்தம் கேட்பது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
இந்நிலையில், கடந்த 16, 17ம் தேதிகளில் பலத்த வெடிச் சத்தம் 30 கி.மீ., சுற்றளவுக்குக் கேட்டது. இதற்கான காரணத்தை அறிய மாவட்ட ஆட்சியராக உள்ள செ.சரவணன் முயன்று, தேசிய நில அதிர்வு மைய வலை தளத்தில் தேடிய போது, மாவட்டத்தில் நில அதிர்வுகள் குறித்து பதிவுகள் ஏதும் காணப்படவில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், மாவட்டத்தில் அவ்வப்போது ஒலிக்கும் பலத்த வெடிச்சத்தம் தொடர்பாக உரிய காரணத்தைத் துல்லியமாக கண்டறியும் பொருட்டும், அதற்கேற்றவாறு மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது மக்களிடம் உள்ள அச்சத்தைப் போக்கவும், வெடிச்சத்தம் குறித்து ஆய்வு செய்திட புவியிலாளர்கள் மற்றும் நிபுணர்கள் கொண்ட குழுவை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், பலத்த வெடிச் சத்தம் நிலநடுக்கம் தொடர்புடையதல்ல மக்கள் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை, அறிவியல் பூர்வமான ஆய்வு விரைவில் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார். மாவட்டத்தில் கடந்த 2012 ம் ஆண்டு முதல் அடுத்தடுத்து பணிபுரிந்த 7 ஆட்சியர்களிடம் இருந்து பெறப்படாத விளக்கம் தற்போதைய ஆட்சியர் முயற்சியலாவது தெரியவர வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் வெடிச் சத்தத்துக்குப் பழகிப் போனாலும் இதற்கான காரணத்தை அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாகத்தான் உள்ளனர். மேலும், வெடிச்சத்தத்தால் வீடுகளில் பெரிய அளவில் விரிசல் ஏதும் ஏற்படுமோ என்றும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இப்போதெல்லாம் பலத்த வெடிச்சத்தம் கேட்டால் இது வழக்கமான ஒன்றுதான் என கடந்து செல்லத் தொடங்கி விட்டனர். இருந்தபோதும் இதற்கான காரணத்தை அறிய மக்கள் மட்டுமல்ல. மாவட்ட நிர்வாகமும் திணறி வருகிறது.