சென்னை: எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனவே நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதை கேட்டால் கிடைக்கும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதங்கத்துடன் சட்டசபையில் பதிலளித்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய கூடலூர் அதிமுக உறுப்பினர் பொன் ஜெயசீலன், தனது தொகுதியில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்
இதற்கு பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருப்பது போல அல்லாமல் தொழில் பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே தகவல் தொழில்நுட்பத்துறை வசம் இருக்கிறது.
மேலும், டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவைகள் தொழில்துறை வசம் இருக்கும் அசாதாரண நிலையே தொடர்கிறது. எனவே நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதை கேட்டால் அது கிடைக்கும்" என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதங்கத்துடன் பதிலளித்தார்.
இந்த சூழலில் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “துறைசார்ந்த பிரச்சினைகளை முதலமைச்சரிடம் பேசி தீர்வு காண வேண்டும். உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் நேர்மறையான பதிலை வழங்க வேண்டும்” என்றும் அறிவுரை வழங்கினார்.