ஆளுநரின் கூட்டத்தை துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும்: முத்தரசன் வேண்டுகோள்


சென்னை: "பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்த உள்ளதாக, தமிழக ஆளுநர் அறிவித்திருப்பது அதிகார அத்துமீறலின் உச்சகட்டம்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்தது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 142 வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்கள் அனைத்தும், அனுப்பி வைக்கப்பட்ட தேதியில் ஒப்புதல் பெறப்பட்டதாகும். அவைகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன என்று அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ள சட்டத்திருத்த மசோதாக்களில், பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநரை நீக்கிவிட்டு, அந்தப் பொறுப்பில் மாநில முதல்வரை நியமிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவும் ஒன்றாகும். இந்த முறையில், பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பில் நியமிக்கப்பட்ட முதலமைச்சர், கடந்த 16-ம் தேதி பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி, அரசின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இச்சூழலில், சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர், வரும் 25, 26, 27 தேதிகளில் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாடு, நீலகிரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எனவும், இந்த மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என்று அறிவித்திருப்பதும் ஒரு அசாதாரண நிலையை, நெருக்கடியை உருவாக்கும் திட்டமாக தெரிகிறது. இந்த மாநாட்டை பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x