சென்னை: அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் வரும் மே 1ம் தேதி மே தின பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்ற திருநாள் மே தினம். ஓய்வு என்பதும், மகிழ்வு என்பதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் உண்டு என்று உரிமைக் குரல் எழுப்பி அதில் வெற்றி பெற்ற நாள் அது. அந்த வெற்றியை தொடர்ந்து, உழைக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெற்று சிறப்படைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு உலகெங்கும் மே 1ம் தேதி மே தினமாக, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், வரலாற்று சிறப்புமிக்க மே தினத்தை கொண்டாட, அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும், புதுச்சேரியிலும் வரும் 1ம் தேதி மே தின விழா பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் கட்சியின் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடனும், கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளுடனும் தொடர்பு கொண்டு, மே தின விழா பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.