சென்னை: ஆலந்தூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றுவதற்கு தமிழக அரசு இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கவும், போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி திமுக சார்பாக மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப் பாளர் கே.கே.சண்முகம் தலைமையில் சுமார் 100 பேருக்கு தலைக் கவசம் வழங்கும் விழா ஆலந்தூர் ராஜா தெரு மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக் கவசம் அணிவித்து அதன் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்து அறிவுறுத்தினார்.
ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு: இதேபோல் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக எல்லையில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப் படுத்தும் வகையிலும், விபத்தில்லா தாம்பரம் மாநகரத்தை உருவாக்கும் வகையிலும், காவல் துறை சார்பில் போக்குவரத்து போலீஸார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மாணவர்களைக் கொண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது, விபத்துகளை தவிர்க்க சாலை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. மேடவாக்கம் பகுதியில், `ஹெல்மெட் இல்லாமல் பயணம் இல்லை' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஆட்டோக்களில் ஒட்டி போலீஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ஆட்டோக்களின் பின்புறத்தில் விளம்பரங்களை ஒட்டுவதால் அதன் உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், போலீஸார் மிரட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதாக எழுந்த புகாரை மறுத்த போலீஸார், ”ஆட்டோ ஓட்டுநர்களின் முழு சம்மதத்துடன் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஹெல்மெட் விழிப்புணர்வுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு வகையில் எங்களுக்கு உதவி புரிகின்றனர்” என்றனர்.