மதுரை: சித்திரைத் திருவிழாவில் அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்க இணைய வழியில் கட்டணம் செலுத்தி பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மண்டகப்படிகள் மற்றும் இதர இடங்களில் உபயதாரர்களால் அன்னதானம், பிரசாத உணவுகள், குளிர்பானங்கள், நீர் மோர், இனிப்புகள் மற்றும் குடிநீர் ஆகியவை வழங்கப்படும். இவற்றை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பாதுகாப்பான உணவாக, செயற்கைச் சாயங்கள் எதுவும் சேர்க்காமல் வழங்க வேண்டும். மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
அன்னதானம் வழங்குவோர் மற்றும் பெறுபவர்கள் சாப்பிட்ட பின்பு அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் கழிவுகளை முறையாகச் சேகரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொண்டு சேர்க்க வேண்டும். திருவிழாவை முன்னிட்டு மண்டகப்படிதாரர்கள், அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்குவோர் https://foscos.fssai.gov.in என்ற வலை தள முகவரியில் இணைய வழியில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
அன்னதானம், பிரசாதங்களை மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அனுமதி (பதிவுச் சான்றிதழ்) பெற்ற பின்பே வழங்க வேண்டும். மேலும், உணவு மற்றும் உணவுப் பொருள் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு அரசு உணவுப் பாதுகாப்புத் துறை கட்செவி (வாட்ஸ் அப்) எண்.94440 42322 என்ற எண்ணில் புகார்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.