திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலையைச் சுற்றி அமைக்கப்பட்டு வரும் கிரிவலப் பாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில், அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
ஒட்டன்சத்திரத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு உட்பட்ட குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகே 2 மலைகள் உள்ளன. அதில் ஒரு மலை மீது குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலுக்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லை. 3 கி.மீ. சுற்றளவு உள்ள இம்மலையில் அரிய வகை தாவரங்கள், மூலிகைகள், மரங்கள் நிறைந்துள்ளன.
இம்மலையைச் சுற்றி வரவும், நடைப் பயிற்சி மேற்கொள்வற்கும் வசதியாக கிரிவலப் பாதை அமைக்க வேண்டும் என்று, ஒட்டன்சத்திரம் பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு, விழுதுகள் அமைப்பினர் கிரிவலப் பாதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, கிரிவலப் பாதையில் இருந்த புதர்கள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பின்னர், ஒட்டன்சத்திரம் தொகுதி எம்எல்ஏ.வும், உணவுத் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி கிரிவலப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி, ரூ.15 கோடியில் கிரிவலப் பாதை அமைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. தற்போது, மலையைச் சுற்றியுள்ள முட்புதர்கள், செடி கொடிகள் அகற்றப்பட்டு, கிரிவலப் பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
மேலும், அமர்ந்து இளைப்பாற வசதியாக இருக்கைகள், குடிநீர், கழிப்பறை மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இது மட்டுமின்றி, மலை மீது உள்ள முருகன் கோயிலுக்குச் செல்ல வசதியாக, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்கள், தன்னார்வலர்கள் இணைந்து படிப்பாதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இனி அனைத்து பக்தர்களும் மலை மீது உள்ள முருகனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் சுவேதா கூறுகையில், ‘பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பதற்காக, ஜூன் மாதம் முதல்வர் திண்டுக்கல் வரவுள்ளார். அப்போது, ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ.1,000 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தும், குழந்தை வேலப்பர் கோயில் மலையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கிரிவலப் பாதையை திறந்து வைக்கவும் உள்ளார். எனவே, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன’ என்றார்.