அதிகரித்து வரும் கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை


மதுரை: மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக கல்லீரல் தினத்தையொட்டி மருத்துவ இயக்குநரும், குடல், இரைப்பை அறுவை சிகிச்சை துறையின் தலைவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தனாரி தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அவர் கூறியதாவது: சமீப காலமாக கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு (ஃபேட்டி லிவர்) அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமில்லாத வாழ்க்கை முறை, உடற்பருமன் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட காரணிகளால் கல்லீரலில் கொழுப்பு அளவுக்கதிகமாக சேர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. தொடக்க நிலையிலேயே நோயறிதல், உரிய நேரத்துக்குள் சிகிச்சை பெறுதல், வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப்பிடித்தல் மற்றும் இதற்கு காரணமான மூல காரணிகளின் முறையான மேலாண்மை ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

இதற்கு உரிய சிகிச்சை பெறாமல் அலட்சியம் செய்தால், பாதிப்பு தீவிரமடையும். மீண்டும் சரி செய்ய முடியாத கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உணவு முறை, வாழ்க்கை முறை, மதுபானத்தை தவிர்த்தல், சரியான உடல் எடையை பேணுதல், தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மருத்துவ மற்றும் குடல், இரைப்பை அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர்கள் ஶ்ரீனிவாசன் ராமச் சந்திரன், மோகன், இணை மருத்துவ நிபுணர் ஸ்ரீ வித்யா ஆகியோர் உடனிருந்தனர்.

x