கோவை: பொள்ளாச்சி ரயில் நிலையம் முன்புள்ள விநாயகர் கோயிலை ரயில்வே நிர்வாகம் அகற்றக்கூடாது என வலியுறுத்தி சுவாமி விவேகானந்தா சேவா சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி ரயில் நிலையம் முன்பு பழமைவாய்ந்த சக்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே ரயில் நிலைய பகுதியை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதால், விநாயகர் கோயிலை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுவாமி விவேகானந்தா சேவா சங்கம் மற்றும் பாஜக சார்பில் பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “ரயில் நிலையம் அருகே உள்ள சக்தி விநாயகர் கோயில் 150 ஆண்டுகள் பழமையானது. ஆரம்ப காலத்தில் இங்கு ஆலமரத்தின் அடியில் விநாயகர் சிலை இருந்தது. ரயில் நிலையம் வருவதற்கு முன்பே இங்கு கோயில் உள்ளது. இந்த கோயில் நகராட்சியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் உள்ளது. பழமையான இந்த கோயிலை இடிக்க கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்” என்றனர்.