கோவை: கூலி உயர்வு பிரச்சினை தொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், விசைத்தறி உரிமையாளர்கள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் 2022-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தக் கூலியுடன், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சோமனூர் ரகத்துக்கு 15% - இந்நிலையில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், வி.செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. முடிவில் சோமனூர் ரகத்துக்கு 15 சதவீதம், இதர ரகங்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முன்வந்தனர். இந்த கூலி உயர்வை விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏற்றுக்கொண்டு, போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
33 நாட்களாக நடைபெற்ற... இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பூபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, "நியாயமான கூலி உயர்வு கோரி கடந்த 33 நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உண்ணாவிரதமும் நடைபெற்றது. அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்துள்ளது. சோமனூர் ரகத்துக்கு 15 சதவீதம், இதர ரகங்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்று உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிடுகிறோம். பொதுக்குழுக் கூடி முறைப்படி வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்றதாக அறிவிக்கப்படும்" என்றார்.
அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறும்போது, “ஒரு மாதம் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது” என்றார். இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.