ராமேசுவரம்: பஹ்ரைனில் கடலுக்கு சென்ற பாம்பன் மீனவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேசுவரம் அருகே பாம்பன் காமராஜர் நகரை சேர்ந்தவர் சிமோன்சன் (33). இவர் கடந்த மாதம் பஹ்ரைன் நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலாளராக சென்றுள்ளார்.
வழக்கம் போல் சக மீனவர்களுடன் பஹ்ரைனில் உள்ள ஜாவ் கடற்பகுதியில் மீன்பிடிக்கு சென்று விட்டு இன்று அதிகாலை திரும்பியபோது, சிமோன்சன் கடலில் தவறி விழுந்து மாயமாகி உள்ளார். தொடர்ந்து படகிலிருந்த மீனவர்கள் நீண்ட நேர தேடலுக்கு பின்னர் அவரின் உடலை மீட்டுள்ளனர்.
பின்னர் சக மீனவர்கள் சிமோன்சனின் உறவினர்களுக்கு அவர் கடலில் தவறி விழுந்து இறந்த தகவலை கைபேசியின் மூலம் தெரிவித்துள்ளனர். சிமோன்சனுக்கு செல்சியா என்பவருடன் திருமணமாகி ஜெய்ரோ(3), ரெகான் (2) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.