மதுரையில் மனை பிரிவு ஒப்புதல் அளிப்பதில் தாமதம்: டிடிசிபி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு


மதுரை: மதுரை நகர் ஊரமைப்பு இயக்கக அதிகாரிகள் மனைபிரிவு ஒப்புதல், கட்டிட வரைபட அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் தீர்வு காணாமல் நீண்ட காலம் நிலுவையில் வைப்பதாக கட்டிட பொறியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுரை நகர் ஊரமைப்பு இயக்கக (டிடிசிபி) அலுவலகம் ஆணையூரில் உள்ளது. இந்த அலுவலத்தில் மனைப் பிரிவு ஒப்புதல், கட்டிட வரைபட அனுமதி (2,000 சதுரடிக்கு மேல்), நில உபயோக மாற்றம், தனி மனை அங்கீகாரம், விரிவு அபிவிருத்தி திட்டம் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்கப்படுகிறது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது 30 நாளில் உரிய அனுமதி வழங்க வேண்டும். ஆனால், மதுரை நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் விண்ணப்பங்கள் உடனுக்குடன் தீர்வு காணப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாரம் தோறும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குனர் மாவட்டம் தோறும் ஆய்வு நடத்துவது வழக்கம். இந்த ஆய்வின் போது விண்ணப்பங்கள் நிலுவையில் இல்லை எனக் காட்டுவதற்காக ஆய்வுக்கு முதல் நாள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கட்டிட பொறியாளர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கூறுகையில், "மதுரை டிடிசிபி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் பெரும்பாலானவர்கள் 3 ஆண்டுக்கு மேலாக இதே அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பெரிய பெரிய புரமோட்டர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கட்டிட வரைபட அனுமதி வழங்கி வருகின்றனர். கட்டிட வரைபட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது அதிகாரிகள் சிலர் விண்ணப்பதாரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களாகவே வரைபடம் தயார் செய்து அப்ரூவல் வழங்கி வருகின்றனர்.

கேட்கும் பணத்தை கொடுப்பவர்களுக்கு உடனடியாக வரைபடத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அனுமதி வழங்கப்படுகிறது. பணம் கொடுக்காத விண்ணப்பதாரர்களை தேவையில்லாமல் கூடுதல் விபரங்களை கேட்டு அலையவிடுகின்றனர். மதுரை நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகத்தில் மட்டும் 500-க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது.

அனுமதி தொடர்பாக அலுவலகம் சென்றால் அலுவலகத்திற்குள் அனுமதிப்பதில்லை. வாசலிலேயே தடுத்து நிறுத்தி அனுப்புகின்றனர். அதே நேரில் அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள் என்றால் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது. எனவே மதுரை நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகத்தில் மனைப்பிரிவு ஒப்புதல், வரைபட அனுமதி உட்பட பல்வேறு சேவைகளுக்கு உடனுக்குடன் அனுமதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.

x