சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி (49). கணவர் மற்றும் மகன்களுடன் வசித்து வந்த அவருக்கு திடீரென்று மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் சில தினங்களுக்கு முன்பு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உறுப்புகளை தானம் கொடுக்க குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதையடுத்து, சிறுநீரகங்கள், கல்லீரல், கண் விழி வெண்படலங்கள் தானமாக பெறப்பட்டது. அதில், ஒரு சிறுநீரகம் ராஜீவ் காந்தி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் மேத்தா மருத்துவமனை நோயாளிக்கும், கல்லீரல் அரசு ஸ்டான்லி மருத்துவமனை நோயாளிக்கும் மருத்துவர்கள் பொருத்தினர்.
கண் விழி வெண்படலங்கள் இருவருக்கு பொறுத்துவதற்காக எழும்பூர் கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. உடல் உறுப்புகளை தானமாக வழங்கி, 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த மனோன்மணியின் உடலுக்கு மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.