2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும், என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் இலவச நீட் மற்றும் போட்டித் தேர்வு மையத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக போலி நாடகம் நடத்தி வருகிறது. நீட் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் போது நாமக்கல்லைச் சேர்ந்தவர் தான் திமுகவின் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராக இருந்தார்.
திமுகவில் பலர் அதிகாரமிக்க மத்திய அமைச்சராக இருந்தனர். அப்போது ஏன் அவர்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதால், தமிழகத்தின் வளர்ச்சியை முதல்வர் கெடுத்துக் கொண்டு இருக்கிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக, முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட அனைவரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தனர், என்றார்.
முன்னதாக ஆஞ்சநேயர் கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.