அதிமுக - பாஜக கூட்டணியால் தேர்தல் ஜுரம்: திமுக மீது ஜி.கே.வாசன் விமர்சனம்


அதிமுக-பாஜக கூட்டணி அமைந்ததால் திமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் தமாகா டெல்டா மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தோல்வி பயம் காரணமாக, இரு மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, மாநில சுயாட்சி என மக்களை திமுகவினர் திசை திருப்பி வருகின்றனர். இனியும் திமுகவின் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இயக்கப் பணி, மக்கள் பணி என கட்சியை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் பலத்தைப் பொறுத்து கூட்டணியுடன் பேசி, சீட்டுகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்புள்ளது. இதனால்தான் முதல்வரும், அமைச்சர்களும் மத்திய அரசை குறை கூறி வருகிறார்கள் .

மேலும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால், திமுகவுக்கு கடந்த வாரத்திலிருந்து தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற திமுக எத்தகைய யுக்திகளைக் கடைப்பிடித்தாலும் எந்தப் பலனும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்

x