திமுகவை இந்தியா முழுவதும் வியந்து பார்த்து பாராட்டுகிறார்கள்: திருச்சி சிவா பெருமிதம்


விருதுநகர்: மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக, மாநில நலனுக்கு எதிராக கொண்டுவந்துள்ள பாதகமான சட்டங்களுக்காக குரல் கொடுக்கும் திமுகவை இந்தியா முழுவதும் வியந்து பார்த்து பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள் என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா கூறியுள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, “ இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கனவு வரும், சிலருக்கு இரவில் வரும், சிலருக்கு பகலில் வரும். எது வர வேண்டும் என்று யாரும் தீர்மானிக்க முடியாது. ஒரு அரசியல் கட்சி நாங்கள் வலிமையாக உள்ளோம் என்று கூறுவதோடு, நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது இயற்கைதான். ஆனால், எது நடக்கப்போகிறது என்பதை தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது.

திமுக என்ற இயக்கம் தலைவராக உள்ள ஸ்டாலின் முதல்வராக இருந்து செய்த தொண்டு, ஆட்சியில் இருந்து செய்த பணிகள், அனைத்துப் பகுதிகளிலும் அமைச்சர்கள் சிறப்பாக பணியாற்றியது, மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக, மாநில நலனுக்கு எதிராக கொண்டுவந்துள்ள பாதகமான சட்டங்களுக்காக குரல் கொடுக்கும் திமுகவை இந்தியா முழுவதும் வியந்து பார்த்து பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக எங்கள் பணியும், ஆற்றியுள்ள தொண்டும் மக்களை எங்கள் பக்கம் நிற்கச் செய்யும். எத்தனை படையோடு வந்தாலும், பரிவாரத்தோடு வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

x