கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் மற்றும் சைவம், வைணவம் குறித்து அவதூறாக பேசியுள்ளதைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று சிதம்பரம் காந்தி சிலை அருகே தமிழக வனத்துறை அமைச்சர் பொன் முடியை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் தலைமை தாங்கினார். இதில் மகளிர் அணி நிர்வாகி ரங்கம்மாள், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், நகர செயலாளர் செந்தில்குமார், நகரத் துணைச் செயலாளர் அரி சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு அமைச்சர் பொன்முடியை கண்டித்து பேசினார் .
இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். நகர உதவி ஆய்வாளர் பரணிதரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.