அதிமுக மூத்த நிர்வாகி மீது திடீர் தாக்குதல்: திருவண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உட்கட்சி பூசல் எதிரொலியாக அதிமுக மூத்த நிர்வாகி தாக்கப்பட்டதாக கூறப்படும் நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சைவ, வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் தரம் தாழ்ந்து விமர்சித்த திமுகவைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத முதல்வர் ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பாக, கோஷ்டி பூசல் எழுந்தது. மேடையில் நிற்பது தொடர்பாக மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் ரேடியோ ஆறுமுகத்துக்கும், பெண் நிர்வாகி ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மூத்த நிர்வாகியான ரேடியோ ஆறுமுகத்தின் கன்னத்தில் பெண் நிர்வாகி அறைந்ததாகவும், பின்னர் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரேடியோ அறுமுகம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அதிமுகவினர் கூறும்போது, “கட்சியின் மூத்த நிர்வாகி ரேடியோ ஆறுமுகம். கடந்த 42 ஆண்டுகளாக கட்சியில் உள்ளார். கட்சியில் நடைபெறும் அனைத்து அசைவுகளையும் அறிந்தவர். இதேபோன்று, திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுகவில் நடைபெறும் அனைத்தும், அவருக்கு தெரியும். நிர்வாகிகள் காலியிடம் மற்றும் நியமனம், உட்கட்சி செயல்பாடுகள் குறித்து தெரிந்தவர். இது தொடர்பாக கட்சி தலைமைக்கும் தகவல் தெரிவித்து வந்துள்ளார்.

மேலும் இவரது ஆடியோ, சமூக வலைதளத்தில் வெளியானது. இதனால் அவர் மீது, நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, அவரது வீட்டை ரவுடி கும்பல் நோட்டமிட்டதாக, காவல் நிலையம் வரை புகார் சென்றது. இதனால் ஏற்பட்ட புகைச்சல்தான், அவர் மீதான தாக்குதல் வரை சென்றுள்ளது. கட்சியில் கருத்து வேறுபாடு இருக்கலாம். இதற்காக மூத்த நிர்வாகியை தாக்குவது என்பது ஏற்புடையதல்ல. இந்நிலை தொடராமல் இருக்க கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

x