ராஜபாளையம்: ஸ்ரீவில்லிபுத்தூர் கல்மண்டபங்கள், ராஜபாளையம் வானிறை கல், பாறை ஓவியங்கள் உள்ளிட்டவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளது தொல்லியல் ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரத்தில் இருந்து தென்மலை செல்லும் வழியில் குன்றக்குடி பகுதியில் 4 மலைக் குன்றுகள் அருகருகே உள்ளன. இதில் ஒரு குன்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகைகள், பாறை ஓவியங்களும், மற்றொரு குன்றில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட மகா விஷ்ணு சிற்பம் உள்ளது.
இங்கு 3 குகைகளிலும் பாறை ஓவியங்கள் இருந்த நிலையில், மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததாலும், பாதுகாக்கப்படாததாலும் அழிந்து, ஒரு குகையில் மட்டுமே எஞ்சி உள்ளது. மற்றொரு குன்றின் சரிவில் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை என அழைக்கப்படும் வானிறை பாறை போன்று பெரிய பாறை ஒன்று எந்த ஆதாரமும் இன்றி தனியாக நிற்பது புவியியல் அதிசயமாக உள்ளது.
இங்கு செல்வதற்கு வழி இல்லாததாலும், பராமரிப்பு இல்லாமலும் உள்ளது. இப்பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 9-ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தொல்லியல் துறை மானிய கோரிக்கை குறித்த விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் வானிறை கல், குகை ஓவியம், புடைப்புச் சிற்பங்கள் ஆகியவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என அறிவித்தார். அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் உள்ள நாயக்கர் கால கல் மண்டபம், மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார் நத்தத்தில் உள்ள கல் மண்டபம் ஆகியவையும் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கபடும் என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பால் அந்த சின்னங்கள் குறித்து விரிவான கள ஆய்வு செய்யப்பட்டு முழுமையான வரலாறு வெளிவரும் வாய்ப்பு உள்ளதால் இதற்கு தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.