இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவுபோல் விஜய் நடந்துகொள்வதில் சந்தேகம்: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் கருத்து


திருநெல்வேலி: இஸ்லாமியர்களுக்கு ஆதரவு போன்று நடிகர் விஜய் செயல்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவருமான அப்துல் சமது எம்எல்ஏ தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு நம் நாட்டில் அளிக்கப்படும் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. இந்த சூழலில் பாதிக்கப்படுவோரின் கடைசி நம்பிக்கையாகத் திகழும் உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்திருத்த விவகாரத்தில் இடைக்கால தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம். சட்டங்களால் சர்வாதிகார தேசத்தை உருவாக்க முயற்சிக்கும் பாஜகவின் செயலை உச்ச நீதிமன்றம் முறியடித்துள்ளது. வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள்தொகைக்கு ஏற்ப உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவையில் அரசியல் பிரதிநிதித்துவம் இருப்பது அவசியம். 6 சதவீதம் இஸ்லாமியர்களை கொண்ட தமிழகத்தில் குறைந்தபட்சம் 14 பேராவது சட்டப் பேரவை உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இப்போது 7 பேர் மட்டுமே உள்ளனர். தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் போதிய அளவில் வழங்கப்படவில்லை. ஆகவே, விரைந்து மறுவரையறை செய்து அதிகப்படுத்த வேண்டும்.

வக்பு வாரிய திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், இஸ்லாமியர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்த கோரியும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தென்மண்டல மாநாடு மதுரையில் மே 31-ம் தேதி நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டும் ஹஜ் கமிட்டி சார்பில் 5,800 பேரை ஹஜ் புனித பயணத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் செயல்பாடுகள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உள்ளதுபோல் இருப்பது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. அவரது நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என இஸ்லாமிய அமைப்பு ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளதை நாங்கள் ஏற்கவில்லை. உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு ஆதரவான இஸ்லாமிய அமைப்பு அது. அவர்களது பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு தெரிவித்தார்.

x