விழுப்புரம்: விழுப்புரம் அருகே இருதரப்பினர் மோதலால் மூடப்பட்ட மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சமுதாய மக்கள் 3-வது நாளாக இன்றும் தரிசனம் செய்ய வரவில்லை.
விழுப்புரம் அருகே உள்ளது மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில். இக்கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி வருவாய்த்துறையினரால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒரு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கில் விசாரணையை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், 2024-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி கோயில் திறக்கப்பட்டு, ஒருகால பூஜை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியரால் போடப்பட்ட 145 தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்று உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கோயிலையைச் சுற்றி 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் காலை அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து ஒரு சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று திரெளபதி அம்மனை தரிசனம் செய்தனர்.
22 மாதங்களுக்குப் பிறகு கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அனைத்து தரப்பு மக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலைக் கட்டிய மற்றொரு தரப்பினர் நேற்று முன்தினம் வழிபாட்டுக்கு வரவில்லை. வெள்ளிக்கிழமை நல்லநாள் பார்த்து வழிபட வருவதாக முதலில் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தாங்கள் கட்டிய கோயிலில் தங்களின் வழிபாட்டு உரிமையை எப்படி அரசு அலுவலர்கள் முடிவு செய்யலாம் என்று கூறி கோயிலுக்கு வராத தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட, போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஏடிஎஸ்பி தினகரன் தலைமையில் போலீஸார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. அர்ச்சகர்கள் திரௌபதியம்மனுக்கு பூஜைகளை நடத்தினர்.
நேற்று முன்தினம் கோயிலுக்குள் வராத சமுதாயத்தினர், நேற்று வழிபட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் தரப்பில் யாரும் வரவில்லை. 3 சிறுவர்கள் மட்டுமே நேற்று கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 7 மணிக்கு கோயில் நடை மீண்டும் அடைக்கப்பட்டது.
நேற்று மாலை மீண்டும் நடை திறக்கப்பட்ட போதும் வழிபட யாரும் வரவில்லை. இன்று காலையிலும் யாரும் வழிபட வரவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நாள்தோறும் காலையில் ஒரு மணி நேரம், வெள்ளியன்று மட்டும் மாலையில் கூடுதலாக ஒரு மணி நேரம் கோயில் நடை திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.