கும்பகோணம்: கேட்டவுடன் எல்லாம் கிடைத்து விடாது, திருமணமானவுடன் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் வேறு விதமாகத்தான் இருக்கும் என திமுக எம்.பி எஸ்.கல்யாணசுந்தரம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சேஷம்பாடியில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு உத்தரவு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பயனாளிகளுக்கு உத்தரவு ஆணையை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி பேசியது: அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அரசுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுப்பது அதிகாரிகள் தான். ஆனால், அண்மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெரியவர் ஒருவர், கும்பகோணத்தில் முறையான குடிநீர் இல்லை, சாலை இல்லை, தெரு விளக்கு இல்லை என அதிகாரிகளிடம் சண்டை போட்டார். கேட்டவுடன் எல்லாம் கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட 10 மாதம் கழித்துத் தான் குழந்தை பிறக்கும். திருமணமான உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாகத் தான் இருக்கும்.
எனவே, அதிகாரிகளிடம் குறை சொல்லும் மக்கள், ஆத்திரப்பட்டு, கோபப்பட்டு திட்டிப் பேசினால், நல்ல விஷயங்களை செய்ய வருபவர்களுக்கு ஆர்வம் குறைந்து விடும். எனவே, அதிகாரிகளை அனுசரித்து பேச வேண்டுமோ தவிர, அவர்களிடம் விதண்டவாதமாக பேசக்கூடாது. உங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என சட்டம் இல்லை. ஆனால், உங்களின் தேவைகளை அறிந்து கடமையை செய்ய வந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். எம்.பி.யின் இந்தப் பேச்சு அங்கிரந்த பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
பெண்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அமைச்சர் பொன்முடி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் தான் பேசியதற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்டார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை அமைச்சர்கள் தெரிவித்து வருவது ஆளும்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தாமல் செயல்பட வேண்டும் என அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார். இந்நிலையில், குழந்தை பிறப்பு குறித்தும், உங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என சட்டம் இல்லை என்றும் திமுக எம்.பி கல்யாணசுந்தரம் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.