பழநி: பழநியில் உள்ள பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில் மாணவரை நாற்காலியால் தாக்கிய பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
பழநி தேவஸ்தான நிர்வாகித்தின் கீழ் இயங்கும் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் அரசு உதவிபெறும் பிரிவு மற்றும் சுயநிதிப் பிரிவில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
சுயநிதிப் பிரிவில் வணிகவியல் துறை பேராசிரியராக கவுதமன் (40) பணிபுரிந்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவரை நாற்காலியால் தாக்கியதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாணவரை தாக்கிய பேராசிரியர் குறித்து கல்லூரி நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பேராசிரியர் கவுதமனை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து பழனியாண்டவர் கலை கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, வணிகவியல் துறை விரிவுரையாளர் கவுதமன், தன்னை தாக்கியதாகவும், மாணவர்களை தகாத வார்த்தைகளில் பேசி வருவதாகவும் 3-ம் ஆண்டு மாணவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அது குறித்து விசாரித்ததில் சம்பவம் நடந்தது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து, விரிவுரையாளர் கவுதமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றனர்.