சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்கீழ் சென்னை அஞ்சல் மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் 74,332 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு பெண் குழந்தைகளின் நலனுக்காக செல்வமகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகர் கோட்டங்கள், அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை அஞ்சல் மண்டலத்தில் கடந்த 2024-25-ம் ஆண்டில் மட்டும் இத்திட்டத்தில் 74,332 சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், வைப்புத் தொகையாக ரூ.1,798 கோடி பெறப்பட்டது. முந்தைய ஆண்டில் பெறப்பட்ட ரூ.1,564 கோடியைவிட இது 14.96 சதவீதம் அதிகம்.
இத்திட்டம் தொடங்கியதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் அதாவது, கடந்த மார்ச் 31-ம் தேதி வரை சென்னை மண்டலத்தில் ரூ.9,234 கோடி வைப்புத் தொகையுடன் 10.44 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் ஒரு நிதி ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இத்தொகைக்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டியும், வருமான வரி சட்ட பிரிவு 80சி-ன் கீழ் வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
குழந்தைகளின் 18 வயதிலோ, உயர்கல்வி நோக்கங்களுக்காக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகோ 50 சதவீத தொகையை திரும்ப பெறலாம். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு முதிர்ச்சியடையும். இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களை www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம், அல்லது அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.