‘பாஜகவுடன் சேர்ந்தால் அழிந்துவிடுவீர்கள்’ - அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய எஸ்டிபிஐ எச்சரிக்கை!


சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது. அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

எஸ்டிபிஐ கட்சி அதிமுக கூட்டணியில் கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இந்த நிலையில் அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளதால், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது எஸ்டிபிஐ.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக், "தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது. ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள். இப்போது முழக்கம் எங்கே போனது? அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.

பாஜகவை பொறுத்தவரை தமக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள். தமக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். அதுதான் அவர்களின் நிலைப்பாடு. எங்கெல்லாம் பாஜக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ, அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகள் அழிந்துபோனதாகத் தான் வரலாறு இருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை.

பாஜகவுடன் கூட்டணி வைத்த முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தங்களை விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாஜகவை வெறுக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

x