ராமேசுவரம் அருகே விடுதியை கையகப்படுத்திய அமலாக்கத் துறை: அந்நிய செலாவணி முறைகேட்டில் நடவடிக்கை


ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே அமலாக்க துறையினரால் கையகப்படுத்தப்பட்ட நட்சத்திர தங்கும் விடுதி.

ராமேசுவரம்: அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே 60 அறைகளுடன் செயல்பட்டு வந்த நட்சத்திர விடுதி மற்றும் அதன் நிலத்தை கையகப்படுத்திய அமலாக்கத் துறை, அந்நிய செலாவணி முறைகேட்டின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேற்குவங்கத்தில் உள்ள ‘டிபி குளோபல் பிக்ஸ்’ என்ற நிறுவனம், அந்நிய செலாவணி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக, கொல்கத்தா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரிசர்வ் வங்கியிடம் டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனம் அந்நிய செலாவணி வர்த்தகத்துக்கு எந்த அங்கீகாரமும் பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனங்களில் விசாரணை மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை அருகே டிபி குளோபல் பிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 60 அறைகள் கொண்ட நட்சத்திர விடுதி மற்றும் அதன் நிலத்தை அமலாக்கத் துறை கையகப்படுத்தி உள்ளது.

x