போலி சான்றிதழ் மூலம் கிடைத்த பணத்தை கார் வெடிப்பு சம்பவத்துக்கு பயன்படுத்திய கும்பல்: என்ஐஏ தகவல்


கார் வெடிப்பு குறித்து விசாரணை நடத்திய போலீஸார். (கோப்பு படம்)

கோவை: போலி சான்றிதழ் தயாரிப்பு மூலம் கிடைத்த பணத்தை, கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்குத் தேவையான வெடிபொருட்களை வாங்கப் பயன்படுத்தியதாக துணை குற்றப்பத்திரிகையில் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே 2022 அக். 23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் (28) உயிரிழந்தார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரி்த்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்ட போத்தனூர் அபுஹனிபா, செல்வபுரம் சரண் மாரியப்பன், உக்கடம் ஜி.எம்.நகர் பவாஸ் ரகுமான், ஷேக் ஹிதயத்துல்லா, உமர் பாரூக் ஆகியோர் மீது நேற்று முன்தினம் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் 4-வது துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை கார் வெடிப்புச் சம்பவத்துக்கு இவர்கள் 5 பேரும் நிதி அளித்துள்ளனர். கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த இக்கும்பலுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால், கரோனா காலம் என்பதால், தேவையான நிதியைத் திரட்ட முடியவில்லை. வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானப் பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. இதைப் பயன்படுத்தி அமீர், உமர் பாரூக் ஆகியோர் 2021-22 காலகட்டத்தில் போலியாக கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை தயாரித்துக் கொடுத்துள்ளனர். அதில் கிடைத்த பணத்தை கார் வெடிப்புக்குத் தேவையான வெடி மருந்துகள் வாங்குவது உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு பவாஸ் ரகுமான், சரண் மாரியப்பன் ஆகியோர் உதவியுள்ளனர். இந்தப் பணிகளுக்கு அபு ஹனிபா பணம் கொடுத்து உதவியுள்ளார்.

மேலும், இவர்கள் வையூரில் உள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் சிலரை சந்தித்ததும், சத்தியமங்கலம் காடுகளில் கூட்டாளிகளுடன் சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த முபின், ஐஎஸ்ஐஎஸ் கலீபாவான அபு-அல்-ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷிக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியேற்றுள்ளார். தங்களது சித்தாந்தங்களை சாராதவர்களை கொல்வதையும் அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x