மதுரை: மதுரை மாநகரில் ஹெல்மெட் போடாவிட்டால் தனி நபருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீஸார், ‘நோ பார்க்கிங்’கில் ஹோட்டல்கள், வணிக வளாங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் மூன், சாலைகளில் வாகனங்களை பார்க்கிங் செய்வோரை கண்டும், காணாமல் அபராம் விதிக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாநகரில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணிவதால் தற்போது வாகன விபத்து மரணங்கள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதை மாநகர காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மாநகர முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீஸார் பணியில் இல்லாவிட்டாலும், அதே சாலைகளில் ஹெல்மெட் போடாதவர்களையும், ‘நோ பார்க்கிங்’கில் வாகனங்களை நிறுத்துவோரையும் கண்டுபிடித்து அபராதம் விதிக்க போலீஸார் சாலைக்கு சாலை நிற்கின்றனர்.
கடந்த காலத்தில் ‘நோ பார்க்கிங்’கில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினாலும், ‘ஹெல்மெட்’ போடாமல் செல்வோருக்கும் ரூ.100, ரூ.200 அபராதம் விதித்தனர். தற்போது ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகள், ‘நோ பார்க்கிங்’ வாகனங்களை நிறுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 அபராதம் தாராளமாக விதிக்கின்றனர்.
போலீஸார் ஹெல்மெட் போடாதவர்கள் மீது காட்டும் கடுமையை போல், ஆட்டோக்காரர்கள் மீது காட்ட தயங்குகிறார்கள். அதனால், ஆட்டோக்கள் அடிக்கடி சுமை தாங்காமல் விபத்துகள் நடக்கிறது. ஆனால் அவை வெளிச்சத்திற்கு வராமலே வழக்குப்பதிவு செய்யாமல் மறைக்கப்படுகிறது. ‘நோ பார்க்கிங்’ இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் ஓடி வந்து அபராதம் விதிக்கும் போலீஸார், முக்கிய சாலைகளில் பார்க்கிங் இல்லாமல் செயல்படும் ஹோட்டல்கள் முன்பு பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் கார்கள் மீது அபராதம் விதிக்க தயக்கம் காட்டுகிறார்கள்.
கே..கே.நகர் ரவுண்டானா அருகே மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் செல்லும் மேலூர் சாலையில் இருந்து பிரிந்து சிட்கோ வழியாக கே.புதூருக்கு செல்லும் சாலையின் தொடக்கத்தில் ஒரு ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், விஐபிகள் சாப்பிட வருகிறார்கள். அவர்கள் கார்கள் அனைத்தும் இந்த ஹோட்டலின் முன் சிட்கோ சாலையின் இரு புறமும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது.
இந்த சாலையில் அரசு போக்குவரத்து கழக டெப்போ உள்ளது. இந்த சாலையில் ஹோட்டல் முன் வாகனங்களை நிறுத்துவதால் அரசு பேருந்துகள் தடையின்றி வந்து செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. பொதுமக்களும் இரு சக்கர வாகனங்கள், கார்களில் இந்த சாலையில் வந்து செல்ல முடியவில்லை. மாநகர காவல்துறை அதிகாரி, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இந்த சாலையில் ‘நோ பார்க்கிங்’கில் தினமும் கார்கள் நிறுத்தப்படுவது தெரிந்து இருந்தும் எந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை.
அதுபோல், கே..கே.நகர் மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள சாலையில் ஹோட்டல்கள், தனியார் நிறுவனங்கள் முன் நிறுத்தப்படும் கார்களுக்கும் போலீஸார் மறந்தும்கூட அபராதம் விதிப்பதில்லை. அழகர் கோயில் சாலையில், கே.புதூரை தாண்டி பார்க்கிங் வசதியே இல்லாத பெரிய சூப்பர் மார்க்கெட் முன் தினமும் மூன்று வரிசையில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் போலீஸார் அபராதம் விதிப்பதில்லை. மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் அருகே பெரிய ஜவுளிக்கடை முன் ‘நோ பார்க்கிங்’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும் அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதில்லை.
போலீஸார் இதுபோன்ற சில நகரச்சாலைகளில் அபராதம் விதிக்காததால் கார்கள், இரு சக்கர வாகனங்கள் தாராளமாக தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மூன்று மாவடி ரவுண்டானா, மாட்டுத்தாவணி ஆம்னி பஸ்நிலையம் சந்திப்பு, அண்ணா நகர் ஆவின் சந்திப்பு, ஒத்தக்கடை சந்திப்பு, சிம்மக்கல் போன்ற வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் போலீஸார் நின்று கொண்டு, ஹெல்மெட் போடாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், ‘நோ பார்க்கிங்’ நிறுத்தப்படும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் ரூ.1,000 அபராதம் விதிக்கிறார்கள்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் ஒரு தரப்பினரிடம் கரிசனமும், மற்றொரு தரப்பினரிடமும் கடுமையும் காட்டும் மாநகர போலீஸாரின் இந்த பாராபட்ச நடவடிக்கையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர். மதுரை போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ மதுரையில் அண்ணாநகர், கேகே.நகர், நீதிமன்ற சாலை, சிட்கோ ரோடு, புதூர் பகுதியில் அழகர்கோயில், மாட்டுத்தாவணி மெயின்ரோடு சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கிறோம், ’’ என்றார்.