தஞ்சை அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சத்துக்கு இடம் வாங்கி கொடுத்த கிராம மக்கள்!


தஞ்சை: ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தேவையான இடத்தை ரூ.15 லட்சத்துக்கு வாங்கி கொடுத்த கிராம மக்களை பொதுமக்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பாராட்டினர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 390 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது 12 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.

இதையடுத்து, கூடுதல் வகுப்பறை கட்ட போதிய இடம் இல்லாத சூழலில், பள்ளிக்கு அருகே தனிநபர் ஒருவருக்கு சொந்தமான நிலம் இருந்தது. இந்த நிலத்தை பள்ளியின் தேவைக்காக பள்ளி வளர்ச்சி மேம்பாட்டு குழுவினர் அவரிடம் கேட்டபோது, 4 ஆயிரம் சதுரஅடி இடத்தை ரூ.15 லட்சத்துக்கு தருவதாக அந்த நபர் கூறினார்.

இதையடுத்து, கிராம மக்கள், பள்ளி வளர்ச்சி மேம்பாட்டு குழுவினர் நிதி திரட்டி, ரூ.15 லட்சத்துக்கு அந்த இடத்தை வாங்கி, ஒரத்தநாடு பத்திரப் பதிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம், கல்வித்துறை பெயரில் பதிவு செய்து, பத்திரத்தை மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் தலைமையில், ஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் வழங்கினர். அரசுப் பள்ளிக்கு நிதி திரட்டி, இடம் வாங்கிக் கொடுத்த கிராம மக்களை, கல்வித் துறை அதிகாரிகள் பாராட்டினர்.

இது குறித்து பள்ளி வளர்ச்சி மேம்பாட்டு குழுவினர் கூறியது: பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கேட்டோம். அதற்கு போதிய இடம் இல்லாத சூழலில், இடம் வாங்கி வழங்கியுள்ளோம். கூடுதல் வகுப்பறையை அரசு விரைவில் கட்டித்தர வேண்டும். எங்கள் பள்ளியில் 7 கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். விரைவில் அவர்களுக்கான வாகன வசதி ஏற்பாடு செய்து தர உள்ளோம் என்றனர்.

x