திருவண்ணாமலை: ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று சுற்றுலா, கலை பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் 8 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது. 4 தொகுதிகளை பிரித்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். ஆரணி மாவட்டம் உருவாகுவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. ஆரணி அரசு மருத்துவமனைக்கு தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக ஆரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வேலூர், திருவண்ணாமலை, செய்யாறில் உள்ள அரசு கலை கல்லூரிக்கு செல்கின்றனர். காலை நேரங்களில் பேருந்து வசதி மிகவும் குறைவாக இருப்பதால் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால், ஆரணி சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு அரசு கலை கல்லூரி அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.