திருப்பத்தூர்: வாணியம்பாடியில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிதீஸ்வரர் கோயிலில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் பழைய வாணியம்பாடி தேவஸ்தானம் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத சுயம்பு ஸ்ரீ அதிதீஸ்வரர் கோயில் உள்ளது. தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் இக்கோயிலும் இடம் பெற்றிருப்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமியை தரிசிக்கின்றனர். மேலும், பிரபலங்களும் அவ்வப்போது இக்கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபடுகின்றனர்.
அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நேற்று காலை வாணியம்பாடியில் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத சுயம்பு ஸ்ரீ அதிதீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, கோயிலுக்கு வந்த இளையராஜாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், சரஸ்வதி, முருகர், தட்ணாமூர்த்தி சன்னதிகள் மற்றும் சுயம்பு வடிவில் கருவறையில் உள்ள ஸ்ரீ அதிதீஸ்வரர் சிவனை, இளையராஜா பயபக்தியுடன் வழிபட்டார். பிறகு, கோயில் வளாகத்தை சுற்றி வந்த இளையராஜா ஒவ்வொரு சந்நதியிலும் சுவாமியை வழிபட்டார். அவருக்கு, கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இசையமைப்பாளர் இளையராஜா வாணியம்பாடி கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோயிலுக்கு வந்து இளையராஜாவை ஆச்சரியத்துடன் பார்த்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அவருடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.