ராஜபாளையம் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை


விருதுநகர்: ராஜபாளையம் நகராட்சியில் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம் நகராட்சியில் பச்சமடம் தெருவில் நுண் உரக்குடில் அமைந்துள்ள வளாகத்தில் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் உள்ளது. இந்த மையம் பல ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கி உள்ளதால், தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள 2 முறை நிதி ஒதுக்கியும், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தகுதியான தன்னார்வ அமைப்பு இல்லாததால் அறுவை சிகிச்சை நடைபெறவில்லை. 2 மாதங்களுக்கு முன்பு, ராஜபாளையம் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த கால்நடை மருத்துவக் குழுவினர், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தினர்.

கடந்த ஜனவரி மாதம் ராஜபாளையம் ஜவகர் மைதானம், சொக்கர் கோயில் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்கா க காத்திருந்த 39 பயணிகளை தெரு நாய்கள் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஏப்ரல் 3-ம் தேதி ராஜபாளையம் மற்றும் சத்திரப்பட்டி பகுதியில் 24 மணி நேரத்தில் 6 மாணவர்கள் உட்பட 64 பேரை வெறி நாய் கடித்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ராஜபாளையத்தில் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x