சிவகங்கை: மானாமதுரை சிப்காட்டில் மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் முறையீடு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட்டில் பொது உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு, மானாமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஆலைக்கு எதிராக சூரக்குளம் பில்லறுத்தான், செய்களத்தூர் ஆகிய 2 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஓராண்டுக்கு பின்னர் ஆலை அமைக்க கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
மக்கள் எதிர்ப்பையும் மீறி ஆலை அமைப்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆலையை அமைக்கக் கூடாது என செய்களத்தூர், பில்லறுத்தான் ஆகிய ஊராட்சிகளில் மார்ச் 29-ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, நேற்று அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் குணசேகரன், நாகராஜன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் மோகன், மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இராம.முருகன் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்தனர். மாவட்ட ஆட்சியர் இல்லாத நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் மனு அளித்தனர்.
இது குறித்து மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம. முருகன் கூறியதாவது: இத்தொழிற்சாலைக்கு பல மாவட்டங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டே இந்த ஆலையை தொடங்கக் கூடாது என கருத்துக்கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், யாருக்கும் தெரியாமல் சிப்காட் வளாகத்தில் கட்டுமானப் பணியை தொடங்கியுள்ளனர்.
மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். இதனால், சிப்காட்டை சுற்றியுள்ள சூரக்குளம் பில்லறுத்தான், செய்களத்தூர், கொன்னக்குளம் ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும். மக்கள் எதிர்ப்பை மீறி ஆலை அமைப்பதை தடுத்து நிறுத்த மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.