விழுப்புரம்: மரக்காணத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் ஆண்டுதோறும் அதிகளவில் தர்பூசணி சாகுபடி செய்வது வழக்கம்.
இங்கிருந்து பழங்கள் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்காக செல்வதுண்டு. கோடையை கருத்தில் கொண்டு, இந்தாண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தர்பூசணி சாகுபடி செய்தனர். பயிரிடும் போதே ரசாயன உரங்களை இடுவதாக சமூகவலை தளங்களில் விஷம வீடியோ பரவியது.
அதை ஒருவாறாக சமாளித்து, முதற்கட்ட சாகுபடியை பெற்றனர். தொடக்கத்தில் வியாபாரிகள் கொள்முதலும் ஓரளவு இருந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு மரக்காணம் பகுதியில் திடீரென கோடை மழை பெய்தது. இந்த மழையால் தர்பூசணி வியாபாரம் பெறும் சரிவை சந்தித்து, அதனால் விலையும் வீழ்ச்சி அடைந்தது.
அதில் இருந்து சற்றே மீண்டு வந்த சூழலில், தர்பூசணி பழத்தில் ஊசி மூலம் செயற்கையான வண்ணத்தை சேர்க்கின்றனர். இதனால் இதை சாப்பிடுகிறவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி ஒரு வீடியோ வெளியிட, அதைச் சிலர் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து பரப்ப, இதன் காரணமாக மக்களிடையே இந்த பழ நுகர்வு குறைந்தது. கடந்த சில நாட்களாக வியாபாரிகள் இந்த பழங்களை வாங்குவதற்கு மரக்காணம் சுற்று வட்டார கிராமங்களுக்கு வரவில்லை.
"தர்பூசணி பழங்களில் யாரும் அப்படி எந்த ஒரு செயற்கை வண்ணத்தையும் சேர்க்கவில்லை. அதன் இயற்கை யான வண்ணமே நல்ல சிவப்பு நிறத்தில் உள்ளது" என்று சாகுபடி செய்யும் விவசாயிகள் உண்மை நிலையை எடுத்துக் கூறி. தோட்டத்தில் இருந்து அப்படியே பறித்த தர்பூசணிகளை வெட்டிக் காட்டி, சமூக வலைதளத்தில் பதில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதில் உரிய விளக்கம் அளிக்குமாறு கூறியிருக்கும் உயர்நீதிமன்றம், இதுபற்றி மக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.
ஆனாலும், இந்த ரசாயன பீதி தொடரவே செய்கிறது. இதனால் விளைந்த தர்பூசணி பழங்களை வாங்க ஆளில்லாமல், மரக்காணம் பகுதி வயல்வெளிகளில் அப்படியே கிடக்கின்றன. பழங்கள் அழுகி வருகின்றன. ஆடு. மாடுகள் வந்து சுவைத்துச் செல்கின்றன. இதனால் இந்தப் பகுதியில் 4,500 ஏக்கரில் பயிரிட்ட தர்பூசணி விவசாயிகள் நடப்பாண்டில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.