விழுப்புரம்: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக எண்ணி இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்த நிலையில் திடீரென அவர் கண்விழத்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அருகே உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40), கூலித் தொழிலாளயான இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்பு புதுச்சேரி அருகே அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை நேற்று கவலைக்கிடமானது. இதுபற்றி பிரகாஷின் குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர். அதற்கு பிரகாஷை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக அவரது உறவினர்கள் கூறினர். அதன்படி பிரகாஷை டிஸ்சார்ஜ் செய்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் பிரகாஷ் இறந்துவிட்டதாக அவரது உறவினர் ஒருவர், மருத்துவமனையில் இருந்தபடி கிராமத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பிரகாஷின் வீட்டு முன்பு சாமியானா பந்தல் போடப்பட்டதுடன் பிரகாஷின் உடலை வைப்பதற்காக சவப் பெட்டியும் கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டது. மேலும் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளில் அவரது உறவினர்கள் ஈடுபட்டனர். மேலும் அடக்கம் செய்வதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளமும் தோண்டப்பட்டது.
இதற்கிடையே ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட பிரகாஷை உறவினர்கள் கீழே இறக்கியபோது அவர் கண் விழித்து கை, கால்களை அசைத்துள்ளார். அவருக்கு நாடித்துடிப்பும் இருந்தது. இதைப்பார்த்த உறவினர்கள், பிரகாஷ் உயிரோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் மகிழ்ச்சியும் அடைந்தனர். உடனடியாக அவரை ஏற்றி வந்த ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் முகக்கவசத்தை பிரகாஷின் முகத்தில் வைத்தனர்.
பின்னர் அவரை தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது அந்த ஆம்புலன்ஸை உறவினர்கள் திடீரென மறித்து, உயிரோடு இருப்பவரை எப்படி இறந்துவிட்டதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தவறாக கூறியது என்று கேட்டு தகராறு செய்தனர். பின்னர் பிரகாஷை தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து காணை போலீஸார் விசாரணை நடத்தினர்.