திருநெல்வேலி: மீண்டும் தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகா தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி வீட்டில் இருந்தபோது, 3 பேர் கும்பல் புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இச்சம்பவம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவர், தற்போது பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அவருக்கு, அரசு சார்பில் திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் வீடு வழங்கப்பட்டுள்ளது.
அவருடன், சமூக வலைதளம் மூலம் பழகிய சிலர், திருநெல்வேலி வசந்தம் நகருக்கு நேற்று முன்தினம் இரவில் வரவழைத்து, அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். காயமடைந்த அம்மாணவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின் நேற்று காலையில் அவர் வீடு திரும்பினார். அவரது வீட்டின்முன் துப்பாக்கி ஏந்திய 2 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே, இந்த வழக்கில் நாங்குநேரி மாணவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி திருமால்நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் முனியாண்டி மகன் சின்னத்துரை (18), தனது தாய் மற்றும் தங்கையுடன் குடியிருக்கிறார். தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு, இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார். இரவு 7.30 மணியளவில் இனம் தெரியாத நபரின் அலைபேசி மூலம் தனது தாயாரை தொடர்பு கொண்டு, மாவட்ட அறிவியல் மையம் அருகேயுள்ள பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இத்தகவல் தெரிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னத் துரையை மீட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சின்னதுரையிடம் விசாரித்த போது, தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் வசந்தம் நகருக்கு சென்றதாகவும், அங்கு வந்த 4 பேர் கட்டையால் அடித்து வலது கையில் காயம் ஏற்படுத்திவிட்டு, அலைபேசியை பறித்துச் சென்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், சின்னதுரையிடம் அவரது இன்ஸ்ட்ரா கிராம் பக்கத்தின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் விசாரணைக்காக காவல் துறையினர் கேட்டபோது, மறந்துவிட்டதாக கூறினார். சிகிச்சை முடிந்து தனது சொந்த விருப்பத்தின்பேரில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இவ்வாறு காவல் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.