சென்னை: திமுக அரசின் 4 ஆண்டுகால ஆட்சியில் சென்னை மாநகராட்சி பூங்காக்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தியாகராயநகர் தொகுதி எம்எல்ஏ ஜெ.கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதில் வருமாறு: சென்னை வடபழனியில் உள்ள மாநகராட்சிப் பூங்கா, தியாகராயநகர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.75 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கபடி, கிரிக்கெட், கைப்பந்து, பூப்பந்து விளையாடும் பகுதிகள், யோகா, உடற்பயிற்சி செய்ய இடம், சிறுவர் விளையாட்டு பகுதி, பூச்செடிகள், நடை பாதைகள் மற்றும் 2 கழிவறைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் இம்மாதத்துக்குள் முடிக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் 2021-ம் ஆண்டுக்கு முன்பு 704 பூங்காக்களும், 610 விளையாட்டு அரங்குகளும் இருந்தன. கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 204 பூங்காக்கள் ரூ.81 கோடியில் புதிதாக அமைக்கப் பட்டுள்ளன. ரூ.24 கோடியில் 37 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சென்னை யில் தற்போது 908 பூங்காக்களும், 724 விளையாட்டு அரங்குகளும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.
தற்போது ரூ.8 கோடியில் 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2025-26 நிதியாண்டில் ரூ.60 கோடியில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. 200-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் ரூ.30 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ த.வேலு, தொல்காப்பிய பூங்கா பராமரிப்புப் பணி எப்போது முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது ரூ.100 கோடியில் தொல்காப்பிய பூங்கா உருவாக்கப்பட்டது. இடையே 10 ஆண்டுகள் எந்த கவனிப்பும் இல்லாமல் இருந்தது. மீண்டும் நமது அரசு அமைந்த பிறகு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது
இப்போது தொல்காப்பிய பூங்கா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது இதுவரை 1,446 பள்ளிகளைச் சேர்ந்த 1.12 லட்சம் மாணவர்கள், 6 ஆயிரம் ஆசிரியர்கள், சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர். பொதுமக்கள் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பூங்காவில் இதுவரை 24,500-க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ரூ.42 கோடியில் பூங்கா மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம் பார்வையாளர் மாடம், நடைபாதைகள், சிற்றுண்டியகம், திறந்தவெளி அரங்கம், இணைப்பு பாலம், கண்காணிப்பு கேமரா, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.