சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை கூறி தமிழக அரசு விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பதாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 முதல் மார்ச் 8 வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ மற்றும் அமலாக்கத்துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர், ‘‘இந்த சோதனையின் போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட வில்லை. ஒரு சில ஆண் அதிகாரிகள் மட்டுமே தங்க வைக்கப்பட்டனர். சோதனையின்போது அதிகாரிகளுக்கோ அல்லது அலுவலக உடமைகளுக்கோ எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை. அதிகாரிகள் ஒப்புக்கொண்டு பஞ்சநாமாவிலும் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆனால், தமிழக அரசு இந்த சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை கூறி விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறது. என்ன நோக்கத்துடன் வந்துள்ளோம் என்பதை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகே சோதனை நடத்தப்பட்டது. அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு போதிய ஓய்வும் அளிக்கப்பட்டது. நள்ளிரவில் யாரையும் அனுப்பவில்லை. அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை முன்கூட்டியே அனுப்பி வைத்தோம். இந்த சோதனையின்போது யாருடைய தனிப்பட்ட அந்தரங்க உரிமையும் பாதிக்கப்படவில்லை’’ என வாதி்ட்டனர்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை டாஸ்மாக் தரப்பு பதில் வாதத்துக்காக வரும் ஏப்.21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.