சென்னை: சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.1,882 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலன் நேற்று திறந்து வைத்தார்.
இது குறி்த்து தமிழகஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் , இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கை யிலான வேலை வாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. தமிழகம் 2024-25ம் ஆண்டில் 9.69 சதவீதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும். தமிழக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழகத்தின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.
அந்த வகையில், தரவு மையங்களுக்கான முன்னணி மையமாக உள்ள தமிழகத்தை தரவு மைய சந்தையில் முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாகவும், நாட்டின் தரவு மைய தலைநகராகவும், மாற்றம் செய்வதற்காக தொலைநோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு தரவு மையக் கொள்கையை கடந்த 2021 நவம்பரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பலனாக, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன.
அந்த வகையில், ஒருங்கிணைந்த இணையச்சேவை தீர்வுகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள், தரவு மைய உள்கட்டமைப்பு, கிளவுட், நெட்வொர்க் சேவைகள் மற்றும் பாதுகாப்பு தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை வழங்கி வரும் சிஃபி டெக்னாலஜீஸ் நிறுவனம், ரூ.1,882 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில் நுட்பப் பூங்காவில், 40 மெகா வாட் மின் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன், ஒரு அதிநவீன தரவு மையத்தை நிறுவியுள்ளது.
முதற்கட்டமாக, இத்திட்டத்தில் ரூ.1,882 கோடி செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய இந்த அதிநவீன தரவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வைத்தார். 2027-ம் ஆண்டுக்குள் சென்னையில், 1ரூ,13 ஆயிரம் கோடி முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்தாண்டு ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செல்வம் எம்பி, எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ., தொழில்துறை செயலர் வி.அருண்ராய், வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, செங்கல்பட்டு ஆட்சியர் ச. அருண்ராஜ், சிஃபி டெக்னாலஜீஸ் நிறுவத்தின் தலைவர் ராஜு வெஜேஸ்னா, செயல் இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.