வகுப்பறைக்கு வண்ணம் தீட்டி நன்றிக் கடன்: திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சபாஷ்!


திருவாரூர்: அரசு பொதுத் தேர்வு முடிந்தவுடன் பல மாணவர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் புத்தகங்களை வீசி எறிவது, பிற மாணவர்கள் மீது பேனா மை தெளிப்பது, வண்ண பொடிகளை தூவுவதுடன், பள்ளிகளில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்துவது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தவுடன், தாங்கள் படித்த பள்ளிக்கு வண்ணம் தீட்டிக் கொடுத்து நன்றிக் கடன் செலுத்தியுள்ளனர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நிகழாண்டு 52 மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்த அன்று, தாங்கள் பயின்ற 2 வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டிக் கொடுக்க முடிவு செய்தனர். இதற்காக பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் தங்களது பெற்றோர் அனுமதியுடன், நிதியுதவி பெற்று ரூ.15 ஆயிரம் செலவில் 2 வகுப்பறை கட்டிடங்களுக்கு தாங்களே வண்ணம் தீட்டினர். அவர்களுக்கு ஆசிரியர்களும் உதவி செய்தனர்.

இது குறித்து அந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் சூர்யா, புகழ், சக்திவேல், குரு உள்ளிட்டோர் கூறியது: எங்கள் பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விசிறி, சிறப்பு வகுப்புக்கு சிற்றுண்டி என பல வசதிகள் பள்ளித் தலைமை ஆசிரியரும், இப்பகுதி கிராம மக்களும் செய்து கொடுத்தனர். இதற்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் வகையில், நாங்கள் படித்த 2 வகுப்பறைகளுக்கு வர்ணம் தீட்டிக் கொடுக்க முடிவு செய்தோம். எங்களது பெற்றோர், ஊர் மக்கள் உதவியுடன் இந்தப் பணியை செய்து கொடுத்தது மன நிறைவாக உள்ளது என்றனர்.

இது குறித்து வகபபு ஆசிரியர்கள் ஜெகதீசன், ஜெயந்தி ஆகியோர் கூறியதாவது: பொதுத் தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள், உற்சாக மிகுதியில் பள்ளிப் பொருட்களை சேதப்படுத்தினார்கள் என்று தான், கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், எங்கள் பள்ளி மாணவர்கள், வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டிக் கொடுத்து முன்னுதாரணமாக இருப்பதை பார்த்து பெருமையாக உள்ளது. இவர்கள் எதிர்காலத்தி்ல் சமூகத்தில் பொறுப்புணர் வோடு நடந்து கொள்வார்கள் என்கின்ற நம்பிக்கை உள்ளது. இதனால், எங்கள் பள்ளியும் பெருமை அடையும் என்றனர்.

x