சிங்கப்பூர்: தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் மகன் உள்ளிட்ட 22 பேரை காப்பாற்றிய தமிழக இளைஞர்கள் 3 பேர் உட்பட 4 பேரை சிங்கப்பூர் அரசு பாராட்டி விருது வழங்கி கவுரவித்துள்ளது.
சிங்கப்பூரில் ரிவர் வேலி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்த 8-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அதன் அருகில் கட்டுமானப் பணியில் இருந்த, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லகம் கிராமத்தை சேர்ந்த சரண் ராஜ் (33), தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை எட்டுப்புளிக்காடு பகுதியை சேர்ந்த அன்பரசன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விஜய ராஜ், பஞ்சாப்பை சேர்ந்த இந்தர்சிங் ஆகிய 4 பேர் தீ விபத்தில் சிக்கிய 16 குழந்தைகள் உட்பட 22 பேரை தங்களது உயிரை பணயம் வைத்து மீட்டுள்ளனர். அவர்களை சிங்கப்பூர் அரசு பாராட்டி சிறப்பு நாணயங்கள், விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இது குறித்து கல்லகம் சரண்ராஜ் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: சம்பவத்தன்று நாங்கள் பணிபுரிந்த கட்டிடத்திற்கு எதிரே இருந்த பள்ளியில் தீப்பற்றி எரிந்தது. உடனே நானும், என்னுடன் பணியாற்றிய மேலும் சிலரும் சேர்ந்து கட்டிட பணிக்கு வைத்திருந்த உயரமான ஏணிகளை பயன்படுத்தி கட்டிடத்தின் மேல் விரைவாக ஏறி, உள்ளே சென்று தீ விபத்தில் சிக்கிய 16 குழந்தைகள் உட்பட 22 பேரை மீட்டோம்.
இதையடுத்து, எங்களுக்கு சிங்கப்பூரின் அரசு, துணிச்சலான செயல்களில் ஈடுபடும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கும் ஏசிஇ நாணயங்களையும், சிங்கப்பூர் மனிதவளத்துறை சார்பில் "Community Lifesaver Award" என்ற விருதையும் வழங்கி கவுரவித்துள்ளது என்றார்.
பவன் கல்யாண் மகன்: ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கரும் தீ விபத்தில் சிக்கியிருந்தார். இதில் மார்க் சங்கரின் கை மற்றும் காலில் தீக்காயம் ஏற்பட்டது. அவரையும் சரண் ராஜ் உள்ளிட்டோர் மீட்டுள்ளனர். ஆனால் அவர் பவன் கல்யாண் மகன் என்பது தெரியாது என்றும், மறுநாள் செய்திகளை பார்த்து தான் தெரிந்து கொண்டதாகவும் சரண் ராஜ் தெரிவித்தார்.