பெரம்பலூர்: இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஏஐ), பெரம்பலூர் மாவட்டத்தில் 10 அங்கன்வாடி மையங்களுக்கு சரியான உணவு உண்ணும் வளாகம் என்ற சான்றிதழையும், 5 பள்ளிகளுக்கு சரியான உணவு உண்ணும் பள்ளி என்ற சான்றிதழையும் வழங்கியுள்ளது.
இந்தச் சான்றிதழ்களை, தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையங்களின் பொறுப்பாளர்கள், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆகியோர் நேற்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, பெரம்பலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மு.கவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கூறியது: எஃப்எஸ்எஸ்ஏஐ-யின் அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளர்களைக் கொண்டு பல்வேறு கட்ட தணிக்கைகளுக்குப் பிறகு தூய்மையான முறையில் வளாகங்களை வைத்திருத்தல், பணியாளரின் தனிப்பட்ட தூய்மை, சத்தான பாரம் பரிய உணவுகள், செறிவூட்டப்பட்ட உணவுகளை வழங்குதல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத முறையில் உணவு தயாரித்தல், உணவுப் பொருட்களை வீணாக்காமல் குறைத்தல், உணவுப் பாதுகாப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வை வழங்குதல், கலப்படத்தை கண்டறியும் சோதனை முறையை அறிந்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அதில் சிறந்ததாக தேர்வு செய்யப்படும் வளாகங்களுக்கு, சரியான உணவு உண்ணும் வளாகங்கள் சான்றிதழ் எஃப்எஸ்எஸ்ஏஐ-யால் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற சான்றிதழ்கள் வழங்கப்படுவதன் மூலம் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களிடையே சத்தான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்குதலில் ஆரோக்கியமான போட்டி உருவாகும். மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த புரிதல் அதிகரிக்கும். குறிப்பாக, நோயில்லா திறன்மிக்க சிறார்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார்.
சான்றிதழ் பெற்ற மையங்கள், பள்ளிகள்: எஃப்எஸ்எஸ்ஏஐ-யின் சரியான உணவு உண்ணும் வளாகச் சான்றிதழ் பெற்ற 10 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்கள் (அங்கன்வாடி மையங்கள்): வேப்பந்தட்டை வட்டாரத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் 1, கிருஷ்ணாபுரம் 2, வேப்பந்தட்டை மேற்கு தெரு, அன்னமங்கலம் தெற்குத் தெரு, முகமதுபட்டினம், ஆலத்தூர் வட்டாரத்துக்கு உட்பட்ட இரூர் தெற்கு,
இரூர் வடக்கு, செட்டிகுளம் 1A-நடுத் தெரு, செட்டிகுளம் 2A-சாவடி, நாரணமங்கலம். எஃப்எஸ்எஸ்ஏஐ-யின் சரியான உணவு உண்ணும் வளாகச் சான்றிதழ் பெற்ற 5 பள்ளிகள்: சித்தளி, அந்தூர், அரணாரை, நொச்சியம், செஞ்சேரி ஆகிய 5 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள்.