பாம்பனில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிதம்பரம் தீர்த்தம் புனரமைப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி


படம்: எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: பாம்பனில் 300 ஆண்டுகள் பழமையான சிதம்பர தீர்த்தத்தை விவேகானந்தா கேந்திரம் சார்பில் புனரமைக்கப் பட்டுள்ளது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தொடர்புடைய 108 புனித தீர்த்தக் குளங்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. இவற்றில், ராமநாதசுவாமி கோயிலின் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களும் அடக்கம். முன்னர், ராமேசுவரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் ஒரு மாத காலம் தங்கி, 108 தீர்த்தங்களிலும் நீராடி தங்களின் பாவங்கள், தோஷங்களைப் போக்கிவிட்டுச் செல்வார்கள். இந்த 108 தீர்த்தங்களில் சில தீர்த்தங்கள் தனியார் ஆக்கிரமிப்பு, இயற்கை சீற்றங்களினால் அழிவுக்குள்ளாகியும் இருந்தன.

இந்நிலையில், விவேகானந்த கேந்திரத்தின் பசுமை ராமேசுவரம் திட்டத்தின் கீழ், இந்த தீர்த்தங்களை கண்டுபிடித்து, முட்புதர்களை அகற்றி, சுற்றுச்சுவர் எழுப்பி, பக்தர்கள் செல்ல ஏதுவாக புனரமைக்கும் பணி கடந்த 12 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் 50 தீர்த்தங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. தர்மர், சர்வரோக நிவாரணம், பரசுராம், ஞானவாதி, குமுதம், ஹர, நீல கண்ட, பனச்ச, கிருஷ்ண ஆகிய தீர்த்தங்கள் மணலில் முழுமையாக புதையுண்டிருந்தது தோண்டி எடுக்கப்பட்டு புனரமைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், ராமேசுவரம் அருகே பாம்பன் ஊராட்சியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மணலால் மூடப்பட்டு, முட்புதர்களால் சூழப்பட்டிருந்த சிதம்பர தீர்த்தம் கண்டறியப்பட்டு, பசுமை ராமேசுவரம் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி அம்மாள் தலைமையில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன.

இது குறித்து சரஸ்வதி அம்மாள் கூறுகையில், ”சிதம்பரம் தீர்த்தம் முன்பு, பாம்பன் கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தும், பக்தர்கள் புனித நீராடுவதற்கும் பயன்பட்டு வந்துள்ளது. முட்புதர்கள், மணல் மூடிய நிலையில் இருந்த இந்த தீர்த்தத்தை கண்டறிந்து, புனரமைக்கும் பணிகள் ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டன. பணிகள் முழுவதும் நிறைவடைந்தவுடன், பாம்பன் கிராம மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய சிதம்பரம் தீர்த்தம் பயன்படும்” என்றார்.

x