திண்டுக்கல்: தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க, திண்டுக்கல் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பலக்கனூத்து பகுதியைச் சேர்ந்த சண்முகம்-காவேரி தம்பதியின் மகள் நந்தினி (14). கடந்த 2021-ம் ஆண்டு நந்தினியின் காதில் ஏற்பட்ட கட்டியை அகற்ற, ஒட்டன்சத்திரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நடந்த அறுவை சிகிச்சையில் சிறுமிக்கு ரத்த இழப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் நந்தினி உயிரிழந்து விட்டதாகக் கூறி, ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் வழக்குத் தொடர்ந்தனர்.
நேற்று வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குறைதீர் ஆணையத் தலைவர் சித்ரா, உறுப்பினர் பாக்கிய லட்சுமி ஆகியோர் தீர்ப்பளித்த னர். அதில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு, மருத்துவமனை நிர்வாகம் ரூ.30 லட்சம், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் நாச்சிமுத்து ரூ.4 லட்சம், சுதாகர், தீபக் ஆகியோர் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மேலும், சிகிச்சைக்கு சண்முகம் செலுத்திய ரூ.20 ஆயிரத்தையும் சேர்த்து 2 மாதத்துக்குள் இழப்பீட்டுத் தொகையை செலுத்தாவிட்டால், 12 சதவீத வட்டியுடன் செலுத்த நேரிடும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.