கோவை பீளமேட்டில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட நூலகம்; நூல்கள் இல்லாமல் பூட்டிக் கிடக்கும் அவலம்!


கோவை: பீளமேடு பிரதான சாலை பெரியார் நகர் பகுதியில் கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாத மாநகராட்சி நூலகத்தை விரைந்து திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை பீளமேடு பிரதான சாலை பெரியார் நகர் பகுதியில் பிபிஎஸ் காலனி உள்ளது. இந்த பகுதி மாநகராட்சி வார்டு எண் 52-ல் வருகிறது. பிபிஎஸ் காலனியில் கடந்த 2019ல் ரூ.25 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பொது நூலகம் கட்டப்பட்டது. இந்த நூலகத்தை கடந்த 2021ல் அப்போதைய சிங்கா நல்லூர் தொகுதி எம்எல்ஏ நா.கார்த்திக் திறந்து வைத்தார்.

ஆனால், நூலகம் போதிய புத்தகங்கள் வைக்காமல் பயன்பாட்டில் இல்லாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. மேலும் போதிய பராமரிப்பு இல்லாததால் நூலக வளாகம் புதர் மண்டி காணப்படுகிறது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறும்போது, “சிங்காநல்லூர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள மாநகராட்சி நூலகம் பயன்பாட்டில் உள்ளாமல் உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நூலகத்துக்கு சென்று நாளிதழ்கள், நூல்களை படிக்க இயலாத நிலை உள்ளது.

அதேபோல போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளும் நூலகத்துக்கு சென்று படிக்க முடிய வில்லை. எனவே, மாணவர்கள் நலன் கருதி மாநகராட்சி பொது நூலகத்தை திறக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இது குறித்து, மாநகராட்சி கிழக்கு மண்டல அதிகாரிகள் கூறும்போது, “சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட நூலகத்தை நூலக ஆணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும்” என்றனர்.

x