கோவை: ரயில் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசியக் கொடி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் கொடியை மாற்ற வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை ரயில் நிலைய சந்திப்பு வளாகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு குடியரசு தினத்தில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சுப்பாராவ் 2 டன் எடை கொண்ட 100 அடி உயரம் உள்ள பிரம்மாண்ட கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட இந்த பிரம்மாண்ட தேசியக் கொடி 24 மணி நேரமும் பறக்கவிடப்பட்டுள்ளது. பலத்த காற்று, மாசு உள்ளிட்ட காரணங்களால் சேதமடைந்து காணப்படும் போது தேசியக் கொடி மாற்றப்படுவது வழக்கம். ஆனால் தற்போது பல மாதங்களாக தேசியக் கொடி மிகவும் சேதமடைந்து காணப்படும் நிலையிலும் மாற்றப்படாமல் உள்ளது.
இது குறித்து ரயில் பயணிகள் கூறும்போது, “கோவை விமான நிலையம், ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 100 அடி உயரம் உள்ள பிரம்மாண்ட கம்பத்தில் நம் நாட்டின் தேசியக் கொடி 24 மணி நேரமும் பறக்கவிடப் பட்டுள்ளது பெருமைக்குரியது. இருப்பினும் இவற்றை குறிப்பிட்ட காலகட்டத்தில் மாற்ற வேண்டியது அந்தந்த வளாகத்தில் உள்ள அரசுத் துறை நிர்வாகத்தின் கடமையாகும். கோவை ரயில் நிலையத்தில் கொடி மாசடைந்து மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படு கிறது. ரயில் நிர்வாகம் விரைந்து கொடியை மாற்ற வேண்டும்” என்றனர்.
கோவை ரயில் நிலைய அதிகாரிகள் கூறும்போது, “வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசியக் கொடி அடிக்கடி மாற்றப்படுகிறது. தற்போது காணப்படும் நிலை குறித்து தற்போதுதான் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சுதந்திர தினத்தன்று புதிய கொடி ஏற்றப்பட்டது. உடனடியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.